Sunday, March 8, 2009

அதிமுக கூட்டணியின் பிரசாரத்தை முடக்கவே சம்பத் கைது: வைகோ

சென்னை: பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு, நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. நாஞ்சில் சம்பத்தின் பிரசாரம் அ.தி.மு.க. கூட்டணிக்கு வெற்றியை தேடி கொடுக்கும் வலிமையான ஆயுதம். அதை முடக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, அவர் மீது வழக்கு போட்டு போலீசாரை ஏவிவிட்டுள்ளார்கள் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

மதிமுகவின் உயர் நிலைக் குழு மற்றும் ஆட்சி மன்றக் குழுக் கூட்டம் நேற்று கட்சித் தலைமையகமான தாயகத்தில் நடந்தது.

கூட்டம் முடிந்த பிறகு வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,

எந்த தொகுதிகளில் போட்டியிடலாம்? எந்த தொகுதிகளை கேட்கலாம்? என்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. அ.தி.மு.க.வுடன் முதல் கட்ட பேச்சுவார்த்தை நடந்துள்ளது. எந்த தேதியில் உசிதமாக இருக்கிறதோ அன்றைய தினம் பேச்சுவார்த்தை நடைபெறும். எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் என்பதை இப்போது சொல்வதற்கில்லை.

தமிழகத்தில் அறிவிக்கப்படாத, நெருக்கடி நிலை நிலவுகிறது. ம.தி.மு.க. கொள்கை விளக்க செயலாளர் நாஞ்சில் சம்பத்தை கைது செய்வதற்காக திருப்பூரில் இருந்து போலீசார் புறப்பட்டதாக செய்திகள் வந்திருக்கின்றன. தமிழ்நாட்டில் ஜனநாயகத்தின் குரல்வளை நெறிக்கப்படுகிறது. இதை நாங்கள் சட்டரீதியாக எதிர்கொள்வோம். நீதிகேட்டு போராடுவோம்.

பிரசாரத்தை முடக்கவே சம்பத் கைது

பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு, நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. நாஞ்சில் சம்பத்தின் பிரசாரம் அ.தி.மு.க. கூட்டணிக்கு வெற்றியை தேடி கொடுக்கும் வலிமையான ஆயுதம். அதை முடக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, அவர் மீது வழக்கு போட்டு போலீசாரை ஏவிவிட்டுள்ளார்கள்.

நாங்கள் நாட்டின் இறையாண்மைக்கு, ஒருமைப்பாட்டுக்கு எதிரானவர்கள் இல்லை. மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி வரவே கூடாது. ஈழத்தமிழருக்கு பெரும் கேடு செய்தது காங்கிரஸ் அரசு. அதை அகற்ற ம.தி.மு.க. தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் என்றார் வைகோ.

அதிமுக கூட்டணியில் பாமக உள்பட வேறு யாரெல்லாம் இடம் பெறுவார்கள் என்ற கேள்விக்கு வைகோ பதிலளிக்கையில், கூட்டணியில் யார் இடம்பெறுவார்கள் என்பதை ஆரூடம் கணித்து சொல்ல முடியாது. அ.தி.மு.க. தலைமை இந்த கூட்டணியை மிகப்பெரும் வலுவானதாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது. இன்னும் பல கட்சிகள் கூட்டணியில் சேரும் என்று நினைக்கிறேன் என்றார் வைகோ.

கண்ணப்பன் வராதது குறித்து கேட்ட கேள்விக்கு, அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று சொன்னார்கள். ஆனால் எங்களுக்கு தெரியாது. வருவார் என்று எதிர்பார்த்தோம். அழைப்பிதழ் கொடுத்தோம். ஆனால் வரவில்லை. எந்த தகவலும் எங்களுக்கு அனுப்பவில்லை.

டெல்லியில் நடந்த உண்ணாவிரதத்திலும் கலந்து கொள்வார் என்று எதிர்பார்த்தோம். அதற்கும் அவர் வரவில்லை. அதற்கு பெரிய காரணம் எதுவும் இல்லை. எங்களுக்குள் எந்த மனக் கசப்பும் இல்லை. முதல்வர் கருணாநிதியை கண்ணப்பன் சந்தித்தது முன்கூட்டியே எனக்கு தெரியாது என்றார் வைகோ.

No comments:

Post a Comment